லண்டனில் நடைபெற்ற தனது சிம்பொனி வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கர்நாடக சங்கீதம் செலுத்திய காலக்கட்டத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தேவராஜ் மோகன் இயக்கத்தில் கடந்த 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, தனது இசையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். திரையுலகில் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், இப்போதும் இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
இந்த நீண்ட இசை பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தனது முதல் படத்தில் இருந்தே கிராமிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வெஸ்டர்ன் கிளாசிக்கல் எனப்படும் மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி, பலரையும் ரசிக்கவும் வியக்கவும் வைத்தவர்.
அவரது பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து மற்றொரு சாதனையை படைத்துள்ள இளையராஜாவுக்கும், தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி @ilaiyaraaja அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும்… pic.twitter.com/e3Ofpt2Upq
இந்த பதிவில, “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகால திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்! என்று பதிவிட்டுள்ளார்.
