இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாக்கிழமை அறிவித்துள்ளார். இதன் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானு இவர்களின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவாகரத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்டிவிடுவோம் என நம்பினோம். ஆனால், எதிர்பாரத முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம்கூட, உடைந்த மனங்களின் கனத்தினால் சில விஷயங்களை சந்திக்கும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், “ இந்த நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்” என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான தம்பதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
