kerala-logo

நயன்தாரா தனது சக கலைஞர்களால் ஏன் போற்றப்படுகிறார் என்று தெரியுமா?


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாராவின்  Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் ராணா டக்குபட்டி, நயன்தாராவை ஒரு போர் வீரன் எனக் குறிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கூறும் போது, நயன்தாராவின் சினிமா பயணத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் குறித்து அவர் விவரித்துள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Nayanthara Strikes Back: Why she’s respected by her peers

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று பக்க அளவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியிருந்தார். குறிப்பாக, தன் மீதும், தனது வாழ்க்கை துணை விக்னேஷ் சிவன் மீது தனுஷுக்கு வன்மம் நிறைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அந்த ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை 3 வினாடிகள் பயன்படுத்தியிருந்ததால், ரூ. 10 கோடி கேட்டு தனுஷ் அனுப்பியிருந்த நோட்டீஸ்-க்கு எதிரான அறிக்கையை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
அந்த கடிதத்தில், நானும் ரவுடி தான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு தனுஷிடம் போராடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அதற்கான சான்று கிடைக்காததால், மீண்டும் எடிட் செய்து வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த திரையுலக பிரமுகரிடம் இது போன்ற மோதல் ஏற்படுவது அரிதான ஒன்று. ஆணாதிக்கம் நிறைந்த இந்திய திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கின்றனர். நயன்தாரா யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாத காரணத்தினால் தான் அவர் அந்த இடத்தில் உள்ளார் என இயக்குநர் விஷ்ணு வர்தன் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியானது. இதில் இதற்கு முன்னர் கண்டிராத நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை பக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு சில மணி நேரங்களில் நயன்தாராவின் அடுத்த திரைப்படமான ராக்காயி படத்தின் டீஸர் வெளியானது.
டையனா மரியம் குரியன் என்பது நயன்தாராவின் இயற்பெயர். நயன்தாராவின் புகைப்படத்தை ஒரு நகைக்கடை விளம்பரத்தில் பார்த்த இயக்குநர் சத்யன் அந்திக்காட், அவரை மனசினக்காரே என்ற மலையாள படத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடிக்க வைத்தார். அப்போது, 18 வயது நிரம்பிய நயன்தாரா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். அதற்கு அடுத்த ஆண்டே மோகன்லாலுடன் இணைந்து நடித்தார் நயன்தாரா. சந்திரமுகி மற்றும் கஜினி திரைப்படங்கள் நயன்தாராவிற்கு பெயர் பெற்றுத் தந்தன.
நயன்தாரா சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை அடைவதற்கு கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் உதவியாக இருந்தது. அதற்கு முன்பாக கஜினி திரைப்படத்தில் நயன்தாரா கடும் உருவக்கேலிக்கு ஆளானார். அதற்கு பின்பு பில்லா திரைப்படத்தில் நயன்தாராவைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும், 2011-ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் சீதை பாத்திரத்தில் நடித்ததற்காக பல்வேறு விமர்சனங்கள் நயன்தாரா மீது சுமத்தப்பட்டன. எனினும், அவரது ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றனர். இதைத் தொடர்ந்து, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நயன்தாரா நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், இந்திய அளவிலான கவனம் நயன்தாரா மீது திரும்பியது. நயன்தாராவின் ஆவணப்படத்தில், நடிகை ராதிகா, பார்வதி உள்ளிட்ட பலர் அவரது திரை வாழ்க்கையில் அவர் எட்டியிருக்கும் இடம் குறித்து கூறியுள்ளனர்.
தனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து சமூக ஊடகத்தில் நயன்தாரா பதிவிடாமல் இருந்திருந்தால், இவை அனைத்தும் வெறும் குரல்களாகவே இருந்திருக்கும். எனவே ஆணாதிக்கம் நிறைந்த துறையில் லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா வலம் வருவது குறித்து ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.