கண்ணதாசனுக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத தொடங்கிய கவிஞர் வாலி, அவருக்காக எழுதிய அனைத்து பாடல்களும் பலித்த நிலையில், ஒரு பாடல் மட்டும் பலிக்காமல் போனது. அதற்கு வாலி சொன்ன வார்த்தையை கேட்டு எம்.ஜி.ஆர் அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். சினிமாவில், ஆட்சி செய்த அவர், ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் பிரபலமாக அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்த நிலையில், அப்போது வாலி எம்.ஜி.ஆருக்கான பாடல்களை எழுத தொடங்கியுள்ளார். வாலி எழுதிய பல பாடல்கள் இன்றைக்கும் எம்.ஜி.ஆர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஒளிபரப்பாகி வருகிறது.
வாலி எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்த நிலையில், வாலி எழுதிய, இறைவா உன் மாளிகையில் என்று எழுதியபோது பிழைத்து வந்துவிட்டார். நினைத்தேன் வந்தாய் 100 வயது என்று எழுதியபோதும் பிழைத்து வந்துவிட்டார். என் ஆட்சி என்றால் என்று எழுதியதை வைத்து அவர், ஆட்சியில் அமர்ந்தார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று எழுதியபோது அந்த தொடர்பு இப்போதும் நிலைத்திருக்கிறது.
இப்படி வாலி எழுதிய பல பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு பலித்திருந்தாலும், ஒரு பாடல் மட்டும் பலிக்கவே இல்லை. அது தான் ‘எனக்கொரு மகன் பிடிப்பான்’ என்ற பாடல். 3 முறை திருமணம் செய்திருந்தாலும், எம்.ஜி.ஆருக்கு குழந்தை இல்லாத நிலையில், இப்படி ஒரு பாடலை எழுதிய வாலியிடம் எம்.ஜி.ஆர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர், என்னென்ணே இப்படி சொல்றீங்க, உங்களுக்கு வாரிசு இருந்திருந்தால் 4 இருந்திருக்கும் இவ்வளவுதானே.
இன்றைக்கு நாட்டு மக்கள் எல்லோருமே உங்கள் வாரிசு தானே என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் இன்பத்தில் வாலியை கட்டி அணைத்து அழுதுள்ளார். அதேபோல் குழந்தை இல்லாத எம்.ஜி.ஆருக்கு பிடித்த படம் என்றால் அது பெற்றால் தான் பிள்ளையா என்ற படம் தான் என்ற தகவலும் உள்ளது.