தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக உள்ள புஷ்பா 2 தி ரூல் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை வந்த அல்லு அர்ஜூன் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இந்திய அளவில் பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் புஷ்பா 2 என்ற பெயரில், வரும் டிசம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜூனுடன், பஹத் பாசில், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
தற்போது படக்குழுவினர் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜூன், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பான வணக்கம். என் தமிழ் மக்களே வணக்கம். என் சென்னை மக்களே வணக்கம். நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்புடன் வணக்கம்.
தமிழனுக்கும் சென்னை வாசிகளுக்கும் வணக்கம். இந்த நாளுக்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இது ஒரு மறக்க முடியாத நாள். புஷ்பா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன், ஆனால் சென்னைக்கு வரும்போது ஏற்படும் உணர்வு ஈடு இணையற்றது” என்று அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.
சென்னையில் பிறந்த அல்லு அர்ஜுன், தனது பள்ளி, கல்லூரிப் படிப்புகள் அனைத்தையும் சென்னையில் முடித்துள்ளார். இதனால் சென்னையும் தமிழ் மொழியும் அவருக்கு புதிதல்ல. இருப்பினும், சென்னையில் அல்லு அர்ஜூன் பங்கேற்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுவாகும். மேலும் இந்த தருணத்திற்காக தான் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் பேசும்போது, இந்த இடம் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நினைவூட்டுகிறது. நான் நிறைய பேசப் போகிறேன்.
உளவியல் ரீதியாக, ஒருவர் தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகளில் எந்த வகையான வாழ்க்கை வாழ்ந்தார் என்பது அவரது வாழ்நாள் முழுவதையும் தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. எனது இருபது ஆண்டுகளையும் நான் இங்கு கழித்தேன், எனது வேர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இன்று நான் என்னவாக இருந்தாலும் அதற்கு சென்னையில் நான் கற்றுக்கொண்டதுதான் காரணம். நான் எங்கு சென்றாலும் ‘சென்னை பையனாக’ இருப்பேன். நான் மேடையில் பேசும் போது தமிழை மறந்துவிடலாம் ஆனால் நண்பர்களுடன் இருக்கும்போது நான் முழுவதுமாக தமிழில் பேசுவேன் என்று கூறியுள்ளார்.
புஷ்பா தி ரூல் படம் பற்றி பேசுகையில், “உங்கள் அனைவருக்கும் காட்டுத்தீயைக் கொடுக்க நான் மூன்று ஆண்டுகள் உழைத்தேன். இப்போது அதை செய்துவிட்டேன் என்று நம்புகிறேன். நான் பலமுறை இங்கு வந்து பல நிகழ்ச்சிகளுக்காகப் பேசியிருக்கிறேன், ஆனால் எனக்கு எப்போதும் ஒரு விழா, ஒரு அரங்கம் எனக்காகவே வேண்டும்” என்று கூறினார். அப்போது தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்ல,, அல்லு அர்ஜுன், “நாம் இங்கு தமிழில்தான் பேச வேண்டும். அதுதான் நீங்கள் நிற்கும் நிலத்திற்கு கொடுக்கும் மரியாதை. நான் துபாயில் இருந்தால், அரபியில் பேசுவேன், நான் டெல்லியில் இருந்தால், நான் நமஸ்தே என்று சொல்வேன்.
தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவுக்கு நன்றி தெரிவித்த அல்லு அர்ஜூன், “கடந்த நான்கு வருடங்களாக ஒரே ஒரு பெண்ணைப் பார்க்கிறேன், அது ராஷ்மிகா. நான் இப்போது மற்ற நடிகைகளுடன் நடிக்க செல்லும்போது, இது ஏன் ராஷ்மிகாவா இல்லை என்று நினைப்பு வருகிறது. அவருடன் பணியாற்ற வசதியாகிவிட்டேன். நீங்கள் இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியும். என்னை சிறந்த முறையில் நடிக்க வைத்ததற்கு ராஷ்மிகாவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தனது வாழ்க்கையை என்றென்றும் மாற்றியதற்காக தனது இயக்குனர் சுகுமாருக்கு நன்றி தெரிவித்த அல்லு அர்ஜூன், “சுகுமார் இல்லை என்றால் புஷ்பா இல்லை. ஆர்யா இல்லை என்றால் அல்லு அர்ஜுன் இல்லை. நான் இங்கே நிற்கமாட்டேன். நான் எனது முதல் படம் செய்தபோது, அது வெற்றி பெற்றது, ஆனால், நான் அதில் நன்றாக இல்லை. அதனால் அதன் பிறகு எனக்கு படங்கள் வரவில்லை. நான் வீட்டில் உட்கார்ந்து ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் என்னுடன் படம் பண்ண யாரும் தயாராக இல்லை. அப்போதுதான் ஒரு புதிய இயக்குனர் என்னிடம் வந்தார். அவர் பெயர் சுகுமார், ஆர்யா என்று ஒரு படம் செய்தோம். என்னை மிகவும் பாதித்தவர், என்னை ஊக்கப்படுத்தியவர் என்றால் அது சுகுமார்தான். அவர் தனது சிறந்ததைக் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதால் அவர் இங்கு இல்லை. அவர் இல்லாதது அவரது இருப்பைப் பற்றி பேசுகிறது.
“கடைசியாக, எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நபர் இருக்கிறார். அது வேறு யாருமல்ல என் ரசிகர்கள்தான். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு விசேஷமானவர்கள். நான் மேடையில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை, என் ரசிகர்களை நேசிக்கிறேன். என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. கடந்த மூன்று வருடங்களாக எனது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் இதற்குப் பிறகு இன்னும் நிறைய படங்களில் நடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னையில் நீங்கள் சிறுவனாக முதல் நாள் முதல் காட்சி பார்த்த படங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் தான் ரஜினிகாந்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்ததை வெளிப்படுத்த ரஜினிகாந்தின் சைகையை செய்து காட்டி அசத்தினார்.