நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 171-வது படமாகும். படத்தில் ஷாபின், சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பிற்கு தாய்லாந்து செல்வதற்காக இன்று(ஜன.7) சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கூலி படத்தின் பணிகள் 70% நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 30% பணிகள் ஜனவரி 13-ம் தேதியிலிருந்து 25 தேதிக்குள் முடிவடையும் என்றார்.
தொடர்ந்து அவரிடம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறுகிறார்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் திடீரென கோபமடைந்த ரஜினிகாந்த், “அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் தேங்க்யூ” என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
