தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது ‘எல்.ஐ.கே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்கு பேசியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக செய்திகள் இணையத்தில் வைரலாகியது. அமைச்சருடன் விக்னேஷ் சிவன் இருக்கும் படங்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் செய்தியை தெளிவுபடுத்துவதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன்.
என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பிற்காக பாண்டிச்சேரியில் உள்ள விமான நிலையத்தை பார்க்க சென்றிருந்தேன். அதற்கு அனுமதி பெற மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்க வேண்டியிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக என்னுடன் வந்த உள்ளூர் மேலாளர் உணவகம் தொடர்பாக அமைச்சருடன் பேசினார். எனது சந்திப்பிற்குப் பிறகு நடந்தது. ஆனால் இது தவறுதலாக என்னுடன் இணைத்து பேசப்படுகிறது.
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)
அரசு சொத்து விவகாரத்தில் வெளியான மீம்ஸ்கள் வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தேவையற்றது எனப் பதிவிட்டுள்ளார்.
