kerala-logo

ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்… இன்னும் விவாகரத்து பெறவில்லை – சாய்ரா பானு


உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விரைவில் குணமடைய  வேண்டுகிறேன் என சாய்ரா பானு வாழ்த்தினார். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் சாய்ரா பானு தெளிவுபடுத்தினார். மேலும், ஊடகவியலாளர்கள் அவரை ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று குறிப்பிட வேண்டாம் என்றும் சாய்ரா பானு வலியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்க:
தனது கணவர் ரஹ்மானின் கடினமான காலங்களில் அவருக்கு ஆதரவளிக்க சாய்ரா பானு விருப்பம் தெரிவித்தார். ஏனெனில்,  அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருவதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார். ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு சமீபத்தில் மருத்துவக் காரணங்களுக்காக அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது வழக்கறிஞர்கள் வந்தனாஷா மற்றும் கூட்டாளிகள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  “ஏ.ஆர். ரஹ்மான் எனது பிரார்த்தனைகளில் இருக்கிறார், அவர் நலம் பெற வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில், நானும் எனது அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருவதால், நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களின் ஆதரவு, அன்பு மற்றும் பிரார்த்தனைகளை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்” என்று கூறினார். இந்த அறிக்கையில் திருமதி சாய்ரா ரஹ்மான் என்று கையெழுத்திட்டுள்ளார்.
இந்த அறிக்கையுடன் ஒரு ஆடியோ செய்தியில்,  “அனைவருக்கும் வணக்கம் இது சாய்ரா ரஹ்மான். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி எனக்கு கிடைத்தது” என்று சாய்ரா பானு கூறியுள்ளார்.
“அல்லாஹ்வின் அருளால் அவர் இப்போது நலமாக இருக்கிறார்” என்று அவர் ஆடியோ செய்தியில் கூறினார். “நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை என்பதால் நாங்கள் பிரிந்திருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
“ஆனால், தயவுசெய்து, அனைத்து ஊடகவியலாளர்களும் என்னை அவரது முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்… நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம், ஆனால், எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் உள்ளன.” “அனைவருக்கும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு, அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்றும், அவரை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் நான் கூற விரும்புகிறேன்” என்று சாய்ரா ரஹ்மான் அறிக்கையுடன் வெளியிடப்பட்ட ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.
சாய்ரா பானுவும் ஏ.ஆர். ரஹ்மானும் கிட்டத்தட்ட 29 வருட திருமணத்திற்குப் பிறகு, நவம்பர் 19, 2024-ல் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனா ஷா பகிர்ந்து கொண்ட அறிக்கையில், தம்பதியினர் தங்கள் உறவில் ஏற்பட்ட “குறிப்பிடத்தக்க உணர்ச்சிப் பதற்றம்” காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினர். ரஹ்மானும் சாய்ராவும் 1995-ல் திருமணம் செய்து கொண்டனர், மேலும், கதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றனர்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இன்று காலை நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஏ.ஆர். ரஹ்மான் வருகை தந்தார், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் ஆர்.கே. வெங்கடாசலம் மருத்துவ அறிக்கையில் தெரிவித்தார். இன்று காலை, தமிழக முதல்வர், மு.க. ஸ்டாலின் ஆஸ்கார் விருது பெற்ற இசைக்கலைஞரின் உடல்நிலை குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். இசையமைப்பாளர் ரஹ்மானின் தற்போதைய உடல்நிலை குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இசையமைப்பாளர் ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் கூறினார்.  மு.க. ஸ்டாலின் தனது பதிவில், “இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன், நான் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன்! அவர்கள் அவர் நலமாக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் சொன்னார்கள்! மகிழ்ச்சி!” என்று தெரிவித்தார்.

Kerala Lottery Result
Tops