நடிகை மீனா, அவ்வை சண்முகி திரைப்படத்தின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரசிய சம்பவத்தை Behindwoods TV யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் வெற்றிகரமாக வலம் வந்த நாயகிகளின் பட்டியலை எடுத்தால், அதில் நடிகை மீனாவின் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்த வரலாறு நடிகை மீனாவிற்கு இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் மீனா.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பின்னர் தனது திறமைகள் மூலமாக கதாநாயகி அந்தஸ்த்திற்கு உயர்ந்தார். குறிப்பாக, ரஜினி உள்ளிட்ட உச்சபட்ச நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பின்னாட்களில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அந்த அளவிற்கு சினிமா துறையில் நீண்ட நாட்களாக பயணித்து வருபவர் நடிகை மீனா.
இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. அப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து Behindwoods TV யூடியூப் சேனலில் மீனா பகிர்ந்து கொண்டார்.
அதில், “அப்போதைய காலத்தில், கமல் சார் திரைப்படம் என்றால் லிப் டு லிப் கிஸ் சீன் இருக்கும் என்று கூறுவார்கள். அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொள்வதற்கு முன்பாக எனக்கு அது நியாபகத்தில் இல்லை.
இரண்டாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அப்போது, முத்தக் காட்சி படமாக்கப்பட இருப்பதாக உதவி இயக்குநர் கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது. இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நான் தயாராக இல்லை என்று இயக்குநரிடம் கூறுமாறு என் தாயாரிடம் கேட்டுக் கொண்டேன்.
எனினும், அதற்கு முன்பாகவே அக்காட்சியை படமாக்குவதற்கு தயாராகி விட்டனர். கிட்டத்தட்ட அழும் நிலைக்கு நான் சென்று விட்டேன். ஆனால், அந்தக் காட்சியில் வசனம் மட்டும் தான் இடம்பெற்றது. அதன் பின்னர், தான் எனக்கு நிம்மதியாக இருந்தது.
ஏனெனில், அப்போதே கமல் சார் மிகப் பெரிய நடிகராக இருந்தார். அவரிடம் இது போன்று சொல்வதற்கு எனக்கு பயமாக இருந்தது” என்று மீனா தெரிவித்துள்ளார்.
நன்றி – Behindwoods TV Youtube Channel
