நடிகர் எம்.ஆர்.ராதா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, ஒருமுறை கடவுள் பற்றி கேட்ட கேள்விக்கு எம்.ஆர்.ராதா கொடுத்த விளக்கம், குறித்து கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், முற்போக்கு சிந்தனைகளுடன் படங்களை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் எம்.ஆர்.ராதா. நாடக நடிகராக இருந்து சினிமாவில், காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றிருந்த இவர், பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
எம்.ஆர்.ராதா சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தபோதும் நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அந்த வகையில் ஒருமுறை ராமாயனத்தை கிண்டல் செய்து ஒரு நாடகத்தை நடத்தியிருந்தார். இந்த நாடகத்தை பார்த்த பலரும், இது தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வந்த நிலையில், ஒரு சிலர், எம்.ஆர்.ராதாவிடமே நாடகம் எங்களுக்கு மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று புகார் கூறியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்ட எம்.ஆர்.ராதா அடுத்த நாள், இந்த நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் வராலம். ஆனால் தங்கள் மனம் புண்பட்டுள்ளதாக உணரும் எவரும் இந்த நாடகத்தை பார்க்க வர வேண்டாம். அவர்களின் காசு எனக்கு தேவையில்லை. இதை பொருட்படுத்தாமல் நாடகத்தை நீங்கள் பார்க்க வந்து உங்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார்.
அந்த அளவிற்கு முற்போக்கு சிந்தனையுடன் இருந்த எம்.ஆர்.ராதா, ஒரு சில படங்களில், ஹீரோவாகவும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்தாலும நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்த எம்.ஆர்.ராதா, திருச்சியில் நாடகம் நடத்தியுள்ளார். அப்போது எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, தனது நெருங்கிய நண்பரான கவிஞர் வாலியுடன் அந்த நாடகத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது எம்.ஆர்.ராதா கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு நாடகத்தை நடத்தியுள்ளார்.
இதை பார்த்த எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, என்ன ராதா, நீ கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்லி நாடகத்தை நடத்துகிறாய், கடவுள் நம்பிக்கை இருக்கும் பலரும் உன் நாடகத்தை பார்க்க வருகிறார்கள் அவர்கள் நம்பிக்கை புண்படுகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஆர்.ராதா, ஏங்க அவ்வளவு பெரிய கடவுள் நான் சொன்ன இல்லாமல் போய்விடுவாரா என்று கேட்டுள்ளார். இந்த தகவலை கவிஞர் வாலி ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
