திரைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் செய்பவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் விமர்சிக்க வேண்டும் என கூறியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை திரிஷா திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகே தனியார் பல் மருத்துவ மையம் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தை ரசித்து பார்த்தேன். அதை தொடர்ந்து புஷ்பா படம் பார்த்தேன். ஹைதராபாத்தில் திரைப்படம் பார்க்க சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை காண்பதற்காக கூட்டம் திரண்டதில் கூட்டத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது இரண்டு நாட்களுக்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. எப்பொழுதுமே ஒரு நடிகர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்திருக்க வேண்டும். எந்த ஒரு நடிகர்கள் சென்றாலும் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த சம்பவத்தில் யாரை குற்றம் சொல்வது என தெரிவதில்லை.தலைவர் படம் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று தான் பார்த்துள்ளேன். ஆனால் தற்போது இதுபோன்ற சிறப்பு காட்சிகள் வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு அரசு வந்துள்ளது ஒரு நல்ல விஷயம்.
தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படம் ஜனவரி 14 ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் வளையம் மற்றும் சிஸ்டர் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். கடந்த ஆண்டு ஐந்து படங்கள் வெளியாகிய சூழலில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்த டியர் என்ற படம் திரைக்கு வந்தது.திரைப்படங்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பது போன்ற கதையம்சத்துடன் நல்ல பொழுதுபோக்கு மற்றும் உணர்வுப்பூர்வமான திதைக்கதையுடன் இருக்க வேண்டும், மெய்யழகன் போன்ற படங்களில் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை கொண்டிருந்தது.
திரைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் செய்பவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் விமர்சிக்க வேண்டும். பத்மா கதாபாத்திரம் இல்லையென்றால் வடசென்னை படம் இல்லை என்றில்லை. வடசென்னை இரண்டாம் பாகத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் நடிப்பேன்.நான் தளபதியின் ரசிகை, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு நாம் கண்டிப்பாக சப்போர்ட் பண்ணி தானே ஆக வேண்டும், நல்லது நடந்தால் சந்தோஷம். ஒரு நடிகராக அவரை மிகவும் பிடிக்கும் என்பதை நிறைய இடங்களில் கூறி இருக்கிறேன், அவர் ஒரு அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். நல்ல விஷயம்தானே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
நடிகை திரிஷா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஒரு நடிகை என்றாலே நான்கு முதல் ஐந்து வருடம் தான் நடிக்க முடியும் என இருக்கும் நிலையில் அதனை பிரேக் செய்து நானே 12 வருடமாக இந்த இண்டஸ்ட்ரியல் இருக்கிறேன். அஜித் சாரின் படம் என்றால் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும், அந்த வகையில் நானும் விடாமுயற்சி படத்தை பார்க்க எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.
மேலும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றது அது இன்னும் அதிகரித்து கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ,திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் விவாகரத்து குறித்து பேச விரும்பவில்லை அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை குறிப்பாக எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை அதனால் என்னை விட்டு விடுங்கள் எனவும் திருமணம் தொடர்பாக கூடிய சீக்கிரம் கூறிவிடுகிறேன் எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
