விமல் பான் மசாலா விளம்பர சர்ச்சை: ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் மற்றும் விமல் பான் மசாலா தயாரிப்பாளர்களான ஜே பி இண்டஸ்ட்ரீஸ் ஆகியோருக்கு, பான் மசாலா பற்றிய தவறான விளம்பரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Jaipur: Consumer forum issues notice to Shah Rukh, Ajay Devgn & Tiger Shroff over ‘misleading’ pan masala ad
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் மார்ச் 19-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என ஆணையத்தின் தலைவர் கியர்சிலால் மீனா மற்றும் உறுப்பினர் ஹேம்லதா அகர்வால் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர், யோகேந்திர சிங் பதியால், என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமல் பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பது தொடர்பாக தவறான தகவல்கள் பரப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. “உண்மை என்னவென்றால், சந்தையில் குங்குமப்பூவின் ஒரு கிலோ விலை ரூ. 4 லட்சம். குட்காவின் விலை ரூ. 5 மட்டுமே. குங்குமப்பூ மட்டுமல்ல, அதன் வாசனையை கூட சேர்க்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் புகாரைப் பதிவு செய்துள்ளார். “எந்தவொரு உற்பத்தியாளர் அல்லது சேவை வழங்குநரும் தவறான விளம்பரம் செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு தானியத்திலும் குங்குமப்பூவின் பலம் உள்ளது என்று தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சாமானியர் இந்த பொருளைத் தொடர்ந்து உட்கொள்வதால், நிறுவனம் பல கோடி மதிப்பிலான வணிகம் செய்கிறது. இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும்” என புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவலுக்காக நடிகர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும், தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பதியால் கோரிக்கை விடுத்துள்ளார்.
– Hamza Khan