இணையதள சேவையின் மற்றோரு மைல்கல்லாக ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த செயற்கைக்கோள் மூலம் உலகம் முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த இணைய சேவையை இந்தியாவுக்குள் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.
தற்போது முதல் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்தொடர்ச்சியாக ஜியோவும் ஸ்டார்லிங்கின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையசேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் ஒழுங்குமுறை அனுமதிகளுக்குட்பட்டதாக உள்ளது.
இதனால் இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மையம் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதலுக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது.ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் தொலைதூர கிராமங்கள், அங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை மற்றும் தொழில் மேம்பாட்டிற்காக சேவையை ஏர்டெலும் ஜியோவும் வழங்கவுள்ளது.
“ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவைகளை அதிகமான மக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு அணுகுவதற்காக ஜியோவுடன் இணைந்து பணியாற்றவும், இந்திய அரசிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று ஸ்பேஸ்எக்ஸின் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான க்வின் ஷாட்வெல் கூறினார்.